Saturday, January 26, 2008

KUMUDAM குமுதம் பேட்டி

விடுதலைப் புலிகளைப் பற்றி பல வதந்திகள் நிலவும் சூழலில், உண்மை அறிய நார்வேயிலிருக்கும் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனைத் தொடர்பு கொண்டோம். இலங்கையில் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நார்வே அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருப்பவர் இவர். (முன்னைய பேட்டியின்போது சமாதானத்துக்கான நார்வே விசேட துதுவருக்கு வெளிவாரி ஆலோசகராக பணிபுரிந்ததை பதிவுசெய்தார்கள். இம்முறை தவறுதலாக குழுவில் இடம் பெற்றதாக பதிவாகியிருக்கிறது - ஜெயபாலன்)

இலங்கைத் தமிழர் நிலை இப்போது எப்படி உள்ளது?

‘‘பொதுமக்கள் மீதான தொடர் விமானக் குண்டு வீச்சுகளும் பீரங்கித் தாக்குதல்களும் இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கு எதிரான கடற்படையின் அட்டூழியங்களும் அதிகரித்துள்ளது. மறு புறத்தில், அதிகரித்துவரும் மருந்து, உணவுப் பொருட்கள் எரிபொருள் நெருக்கடி விரைவில் தமிழ் மக்களைப் பட்டினிச் சாவுக்குள் தள்ளிவிடும். சர்வதேச கண்காணிப்புக் குழுவின் செயல்பாடுகள் தமிழ் மக்களுக்குக் குறைந்த பட்ச பாதுகாப்பாக இருந்தது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோக பூர்வமாகக் கைவிடப்பட்டதால், ஜனவரி 16_ல் இருந்து சர்வதேசக் கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிவிட்டார்கள்.

இது விடுதலைப் புலிகளின் மீதான யுத்தம் என்று சிங்கள அரசால் குறிப்பிடப்பட்டாலும் இது விடுதலைப் புலிகள் உருவாவதற்கு முன்னமே ஆரம்பித்த தமிழர்மீதான யுத்தத்தின் தொடர்ச்சி என்பதை மறைக்கமுடியாது.’’

இந்தப் போர்ச் சூழலில் இந்தியா என்ன நிலைப்பாட்டில் இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

‘‘இந்தியா, தமிழகம் _ இலங்கைத் தமிழர்களின் நலன்கள் வரலாற்றால் இணைக்கப்பட்டது. இது உடைந்தால் எல்லா தரப்பும் பாதிக்கப்படும். இதனாலும் நீடிக்கும் எங்கள் பகையாலும் சீனாவும் பாகிஸ்தானும் ஏனைய இந்திய விரோதிகளும்தான் பயனடைவார்கள்.

தமிழருக்கெதிரான இனக்கொலைப் போரில் இலங்கை அரசுக்கும் கடற்படைக்கும் உதவுவதை இந்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். நாம் அழிக்கப்பட்டாலும் தமிழர் இனக்கொலைக்கு இந்தியாவும் உதவியது என்கிற பழிச்சொல் வேண்டாம்.’’

பிரபாகரனின் துணைவியார் மதிவதனி ஈழ அகதிகளுடன் சேர்ந்து மின்னல் வேகப் படகுமூலம் தமிழகம் வந்துவிட்டதாக வரும் தகவல்கள் உண்மையா?

‘‘இதுபோன்ற அடிப்படைகள் இல்லாத வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் எப்படிப் பதில் சொல்வது? ஆயிரம் ஆயிரம் வருடங்களாக சிங்கள அரசுகளிடம் இருந்து இலங்கைத் தமிழருக்கு தமிழ்நாடுதான் பாதுகாப்பாக இருந்தது. 1620 வரை நீடித்த இலங்கைத் தமிழரின் யாழ்ப்பாண அரசுக்கு தஞ்சாவூரில் இருந்துதான் படை திரட்டப்பட்டது. அதன்பின்னர் போர்த்துக்கீசியர் காலத்தில் மதரீதியான ஒடுக்குதலுக்கு அஞ்சி நம்மவர்கள் இராமேஸ்வரத்துக்கும் வேதாரணியத்துக்கும்தான் தஞ்சமென்று ஓடி வந்தார்கள்.’’

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சமீபத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்து விட்டதாக செய்திகள் வருகின்றனவே?

‘‘இது அடிக்கடி இலங்கைப் படையினரால் சொல்லப்படுகிற சேதிதானே? சிங்கள ஆட்சியாளர்கள் பிரபாகரனோடு போராட்டம் முடிந்துவிடுமென்கிற அவர்களது நப்பாசையில் தங்கள் கனவைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளின் அமைப்பை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் அவர்கள் கனவுகள் எதுவுமே நனவாகாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்.’’

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பிரபாகரனின் மகன் தலைமை ஏற்கப் போவதாகச் சொல்கிறார்களே?

‘‘இந்தச் சேதிக்கும் அடிப்படை எதுவும் இல்லை. சார்லஸ் அன்ரனி கல்விக்காக லண்டன் போனபோது தப்பி ஓடி விட்டதாகச் சொன்னார்கள். இப்ப திரும்பிவந்து போராட்டத்தில் இணைந்து கொண்டதும் தலைவராகப் போகிறார் என்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களும் அடிப்படையில் ஒன்றுதான்.’’.

_ கடற்கரய்
படம்: சித்ரம் மத்தியாஸ்

Tuesday, January 22, 2008

அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்


போர் நாட்களிலும் கதவடையா நம்

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

வாழிய அம்மா.

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

அன்றுநான் நாட்டிய விதைகள்

வானளாவத் தோகை விரித்த

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

தும்மினேன் அம்மா.

அன்றி என்னை வடதுருவத்தில்

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?


அம்மா

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

நம் முற்றத்து மரங்களில்

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

தம்பி எழுதினான்.

வலியது அம்மா நம்மண்.

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

வானில் ஒலித்த போதெலாம்

உயிர் நடுங்கினையாம்.

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.


இருளர் சிறுமிகள்

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

கன்னிமாங்கனி வாடையில் வந்த

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.


என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

உன்னை வந்து பார்க்கலையாமே.

போகட்டும் விடம்மா.

அவனும் அவனது

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

உன்னைக் காக்க

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

காடும் உளதே


*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு