Saturday, May 14, 2011



நடந்தாய் வாழி தேம்ஸ் நதியே.
வ.ஐ.ச.ஜெயபாலன்
*
வாழிய தேம்ஸ் நதியே என்றபடி
பாலத்தின் கீழே இறங்கினேன்.
`நீர் லில்லி` இலைகள் அசைய
நீந்தும் அன்னக் குடும்பத்தின் சீண்டலில்
உன் கண்ணாடி மேனி
வெள்ளித் தகடாய் நெழிய
துள்ளும் ஒற்றை மீனாய் கை உயர்த்தி
’சலூட்’ வைத்தாய்.
நன்றி தேம்ஸ்.
*
வசந்தப் பதாகையாய் உயர்ந்து
நதியில் முகம் பார்த்துப் பார்த்து மலரும்
ஒரு செறி மரத்தின்கீழ்
பூஞ்செடியாய்க்
காத்திருந்த சிறுமி கை அசைக்க
“மாமா, விருந்தாளி நீங்களா” என
நைட்டிங்கேல் பாடக் கேட்டேன்.
*
விருந்துக்கு வண்ணத்துப் பூச்சிகளை
அழைக்கின்ற புல்வெளிக்கும்
விருந்துக்கு வா என்று
பறவைகளைக் கூவி அழைக்கும்
தேம்ஸ் நதிக்கும்
உச்சி வகுடு பிரிக்கும்
ஒற்றையடிப் பாதையிலே
நல் விருந்தாய் நடக்கின்றேன்.
எனக்கு வழிகாட்டும் சிறுமியோ
அணில்கள் பறவைகள் தேனீக்களின்
பாசைகள் அறிந்தவள் போலும்.
 *
வில்லாக வளைந்து சிறகசைய
நீர்மீது தாவி வான் எழுந்த
அன்னப் பறவையுடன்
என் கவிமனசு முகில் சறுக்குகையில்
சிறுமியோ
நனவுகளின் புல்வெளியில்
கனவுகளைக் கொய்தபடி.
*
இறுதியில் நான் மோனம் கலைந்து
”தேம்ஸ் நதி அமைதியின் தேவதை” என்றேன்.
”என் அம்மா மாதிரி நம்ப முடியாதவள் மாமா” என
எச்சரித்தாள் சிறுமி ...
”இதே தேம்ஸ் நதி,
இதே இதே இதே தேம்ஸ் நதி
ஓரிரவில் வெறிகொண்டு வந்து
நாமெல்லாம் கூச்சலிட
எங்கள் வீட்டு வேலியை உடைத்ததை
நம்புவாயா மாமா” எனக் கேட்டாள்.
சின்ன வயதில்
உணவுமேசையில் நான்
அடம்பிடித்தபோதெல்லாம் அம்மா
”ஆ காட்டு, சாப்பிடு இல்லையென்றால்
தேம்ஸ் நதியைக் கூப்பிடுவேன்” என
மிரட்டுவாள் என்றாள்.
*
`டாண்டிலியன்கள்` பூத்த
இள வசந்தப் புல்வெளியில்
அகாலமாய் முற்றி விதைப் பஞ்சான
பூக்களைத் தேடிப் பறித்துப் பறித்து
காற்றினில் ஊதிக் களித்தபடி
’விலங்கும் அழகியும்’
கதை கேட்க்கும்போதெல்லாம்
என் விலங்காய்
தேம்ஸ் நதியே அசையும் மாமா” எனும்போது
அச் சீறுமி ஒரு பாட்டியாய்த் தொனித்தாள்
*
முகில் தூங்கும் குன்றுகளையும்
பனி தூங்கும் புல்வெளிகளையும்
விலகி விலகி வருகின்ற தேம்ஸ் நதியே
தேன் சிந்தும் பூக்களையும்
வண்ணப் பொடி சிந்தும் பட்டாம் பூச்சிகளையும்
விலகி விலகி நடக்கின்ற அந்தச் சிறுமி.
உனது கபிலநிறச் சிற்றருவி எறேன்.
*
அவள் எப்போதும் நுனி நாவில்
தயாராக ஆயிரம் கதைகளை வைத்துள்ளாள்.
”இடையில் சிலகாலம்
லண்டனின் மலக்குடலாய் நாறி
மீண்டும் தெளிந்து
இங்கிலாந்தின் புன்னகைக்கும் முகமான
தேம்ஸ் நதியெ நீ வாழி.” என்றேன்.
”தூய்மையாகும் தேம்ஸ் நதியில்
மீன்களும் நீர்நாய்களும்
மீண்டு வந்துவிட்டது மாமா” என்று
வீட்டுக்கு உறவினர்கள்
வந்ததைச் சொல்வதுபோல்
சொல்லிக் குதூகலித்தாள்.
*
”பார் தேவதைக் குஞ்சே பார்
 முன் பின்னாய் அப்பா அம்மா அன்னங்கள்
நடுவே பாதுகாப்பாகக் குஞ்சுகள் ” என்று
நேர்கோட்டில் அணி பெயர்ந்த
அன்னக் குடும்ப அழகைக் காட்டியபோது
உதிரும் பூ முகத்துடன்
”அன்னங்கள் நல்ல பெற்றோர்கள்” என்றாள்.
*
”அப்பாவும் அம்மாவும் ஒன்றாகக் கூடுகட்டி
ஒன்றாக முட்டைகளை அடைகாத்து
அப்பாவும் அம்மாவும் ஒன்றாக
குஞ்சுகளைப் பேணுகிற அழகுபார் மாமா”
என்கிற போதவள் குரலுடன் மனசும் உடைந்தது.
”என் அப்பா அம்மா பிரிந்தபோது நான்
இக்குஞ்சுகள்போலச் சிறுமி.
பாட்டிதான் என்னை வளர்த்தது” என்றாள். .
அவளை வாரி அணைத்து உச்சிமுகர்ந்து
”உனக்குப் பாட்டி மட்டுமல்ல
இந்த தேம்ஸ் நதியும் இருக்குதடி” என்றபோது
என் கண்களும் சிந்தின..
*
தேம்பல் மொழியில் சொன்னாள்
”எனக்குத் தேம்ஸ் நதியைப் பிடிக்கும்”
அவள் கரங்களைப் பற்றி
” தேம்ஸ் நதி தேம்புவதில்லை
 புலம்புவதும் இல்லை என்றேன்.
“நானும்தான் மாமா” என்றாள்.
நதிகள் எப்பவும் காலத்தெருவின்
நாடோடிப் பாடகர்கள் என்றேன்.
“தேம்ஸ் நதிக்கும் பாடல்களா” எனக் கேட்டாள்.
ஆம் என்றேன்.
*
தேம்ஸ் நதியின் ஒவ்வொரு திவலையும்
ஒவ்வொரு காலத்தின் பாடலை இசைக்கிறது
சில ரோமானியப் படைகளை எதிர்த்து
ஆங்கில ஆதிவாசிகள் பாடிய
எழுச்சிப் பாடல்களுடன் செல்லும்
வேறுசிலதோ
பைபிளோடு வந்தவர்களின்
முதல் பாடலைப் பாடும்.
இன்னும் சில இசைப்பதோ
இரத்தம் தோய்ந்த வாழ்களோடுயர்ந்த
நாடாளுமன்ற வாதிகளின் போர்ப் பாடல்.
எங்கள் மூதாதைரின் மண்ணைப் பறித்து
வாழ்வைச் சுருட்டிக்கிக் கொண்ட
கிழக்கிந்தியக் கம்பனியாரின்
மமதைப் பாடலும் ஒலிக்கிறதடி என்றேன்.
அன்று குளோப் அரங்கின்முன்னம்
சற்றுத் தரித்துக் கேட்ட
சேக்ஸ்பியரின் காதல் பாடல்களை
இந்த மாநதி இசைக்காத நாளுமுண்டோ?.
காவிரிக் கரையில் மாதவிபாடிய
கானல் வரிகளாய்
காலமெல்லாம் நதிகள் பாடுகிற
முடிவிலிக் கீதங்கள்
கைகோர்த்துக் கரையோரம் நடக்கின்ற
ரோமியோ யூலியட்டுகள் விட்டுச்செல்கிற
காதல் பாடல்கள்தான் என்றேன்.
*
”செல்லம் இதுபோல ஒருநாள்
எங்கள் பாலி ஆற்றம் கரையில் நடக்கலாம்”
“எங்களூர்ப் பாலி ஆறா?”.
அவளுக்கு எங்களூர்ச் சிற்றாறை தெரியவில்லை.
என்தாய்நாடு இங்கிலாந்துதானே மாமா என்றாள்.
சற்று நேரம் தேம்ஸும் நானும்
துருவத்து நதியாய் உறைந்தோம்.
.*
கவலைப் படாதே மாமா எனத் தேற்றினாள்.
”வளர்ந்ததும் தேம்ஸ் நதியின் துடைப்பங்களோடு
என் பாட்டி நாட்டின்
சிற்றாறுகளைப் பெருக்க வருவேன் என்றாள்.
என்னைக் காதல் வசப் படுத்திய தேம்ஸ்
அந்தச் சிறுமியின் உதட்டில்
மகிழ்ச்சியாய் நெழிந்தது.
*
“தேம்ஸ் நதியே தேம்ஸ் நதியே
போருக்குத் தப்பி
உனையே புகலென்று நம்பி வந்த
இந்த கபிலநிற அன்னத்தை அரவணைப்பாய்”

2017
------------------------------------------------------------
* 1642 ஆண்டு இந்ங்கிலாந்தின் உள்ள்நாட்டுப்போரில் கேம்பிறிஜ் நாடாளுமன்ற உறுப்பினர் குறொம்வெல் (Oliver Cromwell 1599 - 1658) தலைமையில் சாள்ஸ் மன்னனுக்கு எதிராக எழுந்த படை.
** தேம்ஸ் நதியின் தென் கரையில் 1599ல் கட்டப்பட்ட சேக்ஸ்பியர் நாடக அரங்கம்
visjayapalan@gmail.com
00919941484253